இந்தியாவின் முன்னணி மற்றும் பெரிய அளவிலான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(எஸ்பிஐ), ஐதராபாத்தில், கோடீஸ்வரர்களுக்கென்றே என பிரத்யேக வங்கி கிளை ஒன்றினை துவக்கி உள்ளது. இந்த கிளை குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்த வங்கி கிளையில், கணக்கு துவங்குவதற்கு குறைந்தது ரூ. 1 கோடி கட்ட வேண்டும் என்றும், முறறிலும் கோடீஸ்வரர்களுக்கென்றே இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் வைத்துள்ள அதிபதிகள், இதனையே அழைப்பாக ஏற்று, வந்து பலனை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இந்த கிளை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 4 ஆயிரம் சதுர அடி பரப்பரவில் அமைக்கப்பட்டுள்ள வங்கியின் இந்த கிளை, கோடீஸ்வரர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதாகவும், மற்ற வங்கி கிளைகளைப் போல் அல்லாமல், இந்த வங்கி கிளையில் வாடிக்கையாளர்களுக்கென்றே பிரத்யேக ரிலேசன்ஷிப் மேனேஜர்கள், 24/7 லாக்கர் வசதி, நீட்டிக்கப்பட்ட வங்கிப் பணி நேரம், வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும் மற்றும் பணத்தை வாங்கிக் கொள்ளும் வசதி, 5 நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிறப்பம்சங்கள் இந்த வங்கி கிளையில் உள்ளது என்றும், வை பை தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட பிசினஸ் கான்பரென்ஸ் ஹால், ஷபையர் கான்பரென்ஸ் ரூம், தங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள 'பேர்ல்' காபி பாரும், 'டோபாஜ்' என்ற பெயரில் நவீன வகையில் வடிவமைக்கப்பட்ட லாக்கர் ரூம், உடைகளை மாற்றிக்கொள்ள வசதியாக 'ஓபல்' என்ற பெயரிலான டிரஸ்சிங் அறையும், ஓனிக்ஸ் மற்றும் கார்னெட் என்ற பெயரிலான வாஷ்ரூம்களும் இந்த கிளையில் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
| < Prev | Next > |
|---|





