திருமணம் ஆவதற்கு முன் ஒரு ஊழியர் தனது பி.எப். பணத்துக்கு தாயை வாரிசாக நியமித்தார் என்பதற்காக மனைவிக்கு அதில் வாரிசுரிமை இல்லை என்றாகி விடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய செங்குப்தா என்பவர் திருமணத்துக்கு முன்பு தனது வருங்கால வைப்பு நிதி (பி.எப்) மற்றும் ஓய்வுகால பயன்களுக்கு வாரிசாக தனது தாய் நிகர்பாலாவை நியமித்து இருந்தார். இதன் பிறகு ஷிப்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1990ல் மரணம் அடைந்து விட்டார்.
இந்நிலையில் செங்குப்தாவின் பி.எப். பணம் யாருக்கு என்பதில் தாயாருக்கும், மனைவிக்கும் போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் செங்குப்தா தனது திருமணத்துக்கு முன்பே தாய் நிகர்பாலாவை வாரிசாக நியமித்து விட்டதால் பி.எப். பணம் அவருக்குத் தான் சேரும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஷிப்ரா மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுண்டகம் சர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பு வருமாறு:
செங்குப்தா 8.11.1990ல் மரணம் அடைந்துள்ளார். அப்போதே வாரிசுதாரர் சட்டம் அமலாகி விடுகிறது.
அவருக்கு தாயாரும், விதவை மனைவியும் தான் வாரிசுகள். இந்து வாரிசுதாரர் சட்டப்படி உயில் எழுதி வைக்காமல் இறந்தவரின் சொத்துக்கு அவரது மனைவி, தாய் மற்றும் பிற சட்டப்படியான பிற வாரிசுதாரர்கள் உரிமை கொண்டாட முடியும். இந்த வழக்கில் செங்குப்தா, திருமணத்துக்கு முன்பே தனது பி.எப். பணத்துக்கு வாரிசாக தாயை நியமித்து விட்டார் என்பதற்காக அவரது மனைவி, வாரிசுரிமையை இழந்து விட மாட்டார். எனவே செங்குப்தாவின் பி.எப். பணத்தில் ஒரு பாதி தாய்க்கும், மறுபாதி மனைவிக்கும் சேர வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





