மும்பை: வங்கிச் சேவையை வாடிக்கையாளர்கள் மேலும் எளிதாகப் பெற புதிய விதிமுறைகளை (பாங்க்கிங் கோட்) இந்திய வங்கிகள் சங்கம், ரிசர்வ் வங்கி, வங்கி விதிமுறை மற்றும் தர வாரியம் அறிவித்துள்ளன. இந்த மூன்று அமைப்புகளின் சார்பில் மும்பையில் நிருபர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. அதில் வங்கி விதிமுறை மற்றும் தர வாரிய தலைவர் உதேசி கூறுகையில், அடுத்த மாதம் முதல் கடன் நிர்வாகம் பற்றி வங்கிகளின் சார்பில் இலவச ஆலோசனைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் சக்ரவர்த்தி கூறுகையில், வங்கிச் சேவைகள் மேலும் வெளிப்படையாக்கப்படுகின்றன. வங்கிகளின் இணைய தளத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், வட்டி விகிதங்கள், கட்டணங்கள் தெளிவாக இடம்பெறும் என்றார்.
வீடு, வாகனக் கடன்களின் மாறும் வட்டி (புளோட்டிங்) விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களை வாடிக்கையாளர்கள் உடனுக்குடன் வங்கி இணைய தளத்தில் அறியலாம் என்றார் அவர். காசோலை பரிமாற்றம், இழப்பீடு, நிலுவைத் தொகை வசூலிப்பு மற்றும் குறைதீர்ப்பு வசதிகளையும் வங்கி இணைய தளத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம். கிரெடிட் கார்டு மற்றும் கடன்களுக்கான முக்கிய நிபந்தனைகள், விதிமுறைகளும் இணைய தளத்தில் கட்டாயம் வெளியிட புதிய விதிமுறை வழி செய்கிறது.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





