அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இலங்கையில் போர், இந்தியாவில் வட மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி. பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி வேகம், திட்டங்கள் செயல்படுத்துவதில் ஜனநாயக நாடுகளில் இந்தியா முதலிடம். தேசிய கட்சியின் வேகமாக வளர்ந்து வரும் ராகுல் காந்தியின் செயல்பாடுகள், ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என்ற கண்ணோட்டத்தில் அவர் அணுகும் முறை என தினமும் ஏதாவது ஒரு பரபரப்பு தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் இவற்றை கவனித்தபடி தங்களது வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டுச் செல்கின்றனர். இந்த பரபரப்பில் நாட்டில் கடும் விஷமாக பரவி வரும் விலை வாசி உயர்வை பற்றி தான் எந்த அரசும் கவனிக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென பல மடங்கு உயர்ந்து உச்சாணிக் கொம்பில் ஏறி நிற்கிறது. இதை மக்களுக்கு அறிவித்தாகவேண்டிய ஊடகங்கள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருவதால் பாமர மக்களுக்கு விலைவாசி உயர்வைப்பற்றிய தகவல்கள் சரியாக தெரியவில்லை
கடந்த ஒன்றரை ஆண்டாகவே விலைவாசி மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.10, 12க்கு விற்பனையான அரிசி இன்று கிலோ ரூ.40, 45க்கு விற்பனையாகிறது. ரூ.40க்கு விற்ற பருப்பு இன்று ரூ.110க்கு விற்பனையாகிறது.
16 ரூபாயிக்கு விற்ற சர்க்கரை இன்று 36 ரூபாயிக்கு விற்பனையாகிறது. இதுபோல அத்தியாவசிய தேவைக்கு பயன்படும் அத்தனை பொருட்களும் அதிரடியாக விலை உயர்ந்து வருகின்றன. இதுமட்டுமா ரூ.120க்கு விற்பனையான ஒரு மூட்டை சிமெண்ட் இன்று ரூ.300 வரை விற்பனையாகிறது. கட்டுமான தேவைக்கு பயன்படும் இரும்பு கம்பி ரூ.20 லிருந்து ரூ.45, 50 ஆக உயர்ந்து நிற்கிறது. . காய்கறி விலைகளைப் பற்றி பேசவே தேவையில்லை. ஒற்றைப்படை விலையில் எந்த காயும் கிடைப்பதில்லை. நடுத்தர ஓட்டல்களில் ஒரு சாதாரண தோச¬யே 20 ரூபாய்க்கு விற்கும் அவலம் இங்கேதான். ஆனால் இந்த விலை உயர்வு பணக்கார வர்க்கத்தை எந்த விதத்திலும் பாதிக்கப்படவும் இல்லை, அவர்கள் இதை உணரவும் இல்லை.
விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தர மக்கள் தான். நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வர்க்கமாகவே இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெறும் 20 சதவீதம் பேர் மட்டுமே வசதி படைத்தவர்களாக உள்ளனர். விலைவாசி உயர்வு 80 சதவீத மக்களை பாடாய் படுத்தி வருகிறது.
மக்களின் ஏழ்மை நிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டு மக்களிடம் வாங்கும் சக்தி தாராளமாக இருந்தால் தான் அந்த நாடு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். முன்னேறும். ஆனால் அவர்கள் விலைவாசி உயர்வால் நசுக்கப்பட்டு வந்தால் ஒரு பக்கம் உயரத்துக்கு செல்வது போல் தோன்றினாலும் மறுபக்கத்தில் படு பாதாளத்துக்கு நாடு சென்று விடும்.
விலைவாசி உயர்வால் கடத்தல், கொள்ளை, வழிப்பறி போன்ற சமூக விரோத குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. உதாரணமாக ஒரு பவுன் தங்கம் ரூ.2 500க்கு விற்பனையானது இன்று ஒரு பவுன் ரூ.12, 500க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு குண்டு மணி தங்கம் கூட சுதந்திரமாக அணிந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த அதிரடி விலை உயர்வுக்கு காரணம் என்ன என பொதுமக்களும், ஆட்சியாளர்களும் ஒருபோதும் சிந்திக்கவில்லை. உற்பத்திக்கு எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். விலைவாசி இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு காரணம் நாட்டில் விவசாயம் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பது தான். விளை நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் அரசுகள் உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்க மறுக்கின்றன.
விவசாயத்தை அரசு ஒரு ஜீவனாம்ச தொழிலாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை அந்த நாட்டில் நடைபெறும் விவசாயம் என்பதை மறந்து விடுகின்றனர். எந்த நாடு விவசாயத்தை ஊக்குவிக்கிறதோ அந்த நாடு தான் முன்னேற்றமடையும்.
தமிழகத்தில் இப்போதைய நிலை விவசாயத்தை ஒரு தொழிலாக மேற்கொள்வதில்லை. பருப்பு விலை உயர்ந்து விட்டதா, உடனே அதன் விளைச்சலை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைத் தான் முதல் நடவடிக்கையாக எடுக்கின்றன.
ஏற்கனவே எண்ணை வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது பருப்பு. நாளை அரிசி, சர்க்கரை, கடுகு, சீரகம், டீ, காபி என அனைத்தையும் இறக்குமதி செய்யும்.
அரசின் இந்த நிலை நீடிக்கும் வரை விலைவாசி ஜெட் வேகத்தில் தான் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும். அரசின் இந்த மாற்றத்துக்கு மாறாக பற்றாக்குறை ஏற்படும் விவசாய விளை பொருட்களின் விளைச்சலை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை திட்டம் நாட்டின் மிகச் சிறந்த திட்டம் தான். ஆனால் இந்த திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது. வட மாநிலங்களுக்கு பொருத்தமானது. தமிழகம் விவசாயத்தில் முதலிடத்தில் இருக்க கூடியது. இங்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தர வருவாய் கிடைக்க கூடிய தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு சென்று விடுகின்றனர். இதனால் விவசாயம் ஸ்தம்பித்துள்ளது. விலைவாசி உயர்வு ஏற்படும் காலங்கள் மற்றும் விவசாயம் செழிக்க கூடிய சீசனில் மட்டுமாவது வேலை உறுதி திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். ஓட்டுக்களை பெறுவது, ஆட்சி கட்டிலில் அமருவது, கோடி, கோடியாய் பணத்தை குவிப்பது இது மட்டுமே குறிக்கோளாக இருக்கும் வரை நாட்டின் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் இந்த விலைவாசி உயர்வு இதே நிலையில் நீடித்து இருந்து விடாது. மக்கள் கொஞ்ச நாளைக்கு தான் பொருத்துக் கொள்வார்கள். அவர்கள் புரட்சியில் இறங்கி விட்டால், ஒன்று பட்டு விட்டால் அவர்களுக்கு அரசோ, ஆட்சியாளர்களோ தேவையில்லை. விஷம்போல் ஏறிய விலைவாசி, சூரியனைக் கண்ட பனிபோல் விலகி விடும். இந்த எதிர்கால மாற்றங்களை அறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் நன்மை தான்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!








விவசாயம் மட்டுமல்ல,
வேலைக்கு தொழிலாளர்கள் கிட்டாமல்
அனைத்து தொழில்களுமே
பாதிக்கப்ப்ட்டுள்ளது உண்மை.
ஒரிசா / பீகார் போன்ற மாநிலங்ளுக்கு
வேண்டுமானல் இது பொருத்தமாக இருக்கலாம்.