Wednesday
Mar 10th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுகிறதா துபாய்....?

E-mail Print PDF
-எஸ்கா

வடிவேல் காமெடியில் வருவது போல  இன்றைய நிலையில் துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து என எங்கெங்கும் வியாபித்திருப்பது துபாயின் பொருளாதார வீழ்ச்சி பற்றிய பேச்சுக்கள் தான். சமீபத்தி்ல் துபாயில் புயலைக் கிளப்பிய பொருளாதாரப் பிரச்சினையை துபாய் கடன் குமிழ் (Dubai Debt Bubble) என வர்ணிக்கின்றன மீடியாக்கள்.


சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா ஆரம்பித்து வைத்த பொருளாதார வீழ்ச்சி அமெரிக்கப் பொருளாதாரத்தை மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தையே ஆட்டிப்பார்த்ததைப் போல இன்றைக்கு துபாயிலும் ஒரு பெரும் பிரச்சினையின் வால் தென்பட்டிருக்கிறது. கடன் பிரச்சினை.. அங்கே லேமென் பிரதர்ஸ் வங்கி என்றால் இங்கே துபாய் வேர்ல்டு நிறுவனம். துபாய் முழுக்க அலுவலகக் கட்டிடங்கள், ஷாப்பிங் மால்கள், டூரிஸ்டுகளைக் குறி வைக்கும் பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட வளாகங்களைக் கட்டித் தள்ளியது அந்நிறுவனம். ஏன்? துபாயின் புதிய அடையாளமாகத் தென்படும் கடலில் மிதக்கும் பனைமரத்தீவையும் கட்டியது இந்த நிறுவனம் தான். அதற்குத்தான் இந்தக் கடன் பிரச்சினை எழுந்திருக்கிறது.

என்னதான் நடந்தது அப்படி?

கடந்த நவம்பர் 26ம் தேதி, துபாய் வேர்ல்டு நிறுவனம் தனக்கு 59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 5900 கோடி ரூபாய்) கடன் இருப்பதாகவும், தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அதைத் திருப்பிக் கட்ட அடுத்த வருடம் மே மாதம் வரை கெடு கேட்டது. பேங்க் ஆஃப் பரோடா வங்கி அதிக பட்சமாக கடன் வழங்கியுள்ளது. துபாய் வேர்ல்டு நிறுவனத்திற்கு மட்டும் சுமார் 9 பில்லியன் (900 கோடி) ரூபாய் அளவு உள்ளது கடன்.

மறுநாளே உலகம் முழுக்க அனைத்து பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை மட்டும் 390 புள்ளிகளை இழந்தது. இத்தனைக்கும் அன்றுதான் இந்திய, மத்திய புள்ளியியல் நிறுவனம், இந்தியாவின் ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.9 புள்ளிகள் வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக அறிவித்தது. துபாய் பிரச்சினை கிளப்பப் படாமல் இருந்திருந்தால் அன்றைய வர்த்தகம் ஒரு நல்ல வளச்சியைக் கண்டிருக்கும்.

ஆனால் இதனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இருக்காது என்று கூறுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். பார்க்கலாம். ஆனால் துபாயின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அங்கே வேலை செய்பவர்கள். இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில் ஒய்2கே பிரச்சினை முடிந்த நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்திய கம்ப்யூட்டர் என்ஜினியர்கள் திருப்பி அனுப்பப் பட்டது போல இவர்களும் திருப்பி அனுப்பப் படலாம்.

துபாயின் மொத்த மக்கள் தொகை 2.26 மில்லியன் (அதாவது சுமார் 22இலட்சத்து அறுபதாயிரம் பேர்) அதில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்து இலட்சம். இது மொத்த மக்கள் தொகையில் சுமார் 42 சதவீதம் ஆகும். கிட்டத்தட்ட பாதி. அப்புறம் இது இந்தியாவை பாதிக்காமல் என்ன செய்யும்? நேரடியாக இல்லாவிட்டால் மறைமுகமாகவாவது பாதிக்கும் அல்லவா?.

மறைமுகமாக என்றால் எப்படி?

துபாய் தொழிலாளர்கள் வேலையிழந்து இந்தியாவிற்கு திரும்பி வந்தால் இங்கே அவர்களுக்கு வேலை? இங்கே அவர்களுக்கு வேலை கிடைத்தால் இங்கிருப்பவர்களுக்கு போட்டி வருமல்லவா? ஆக... போட்டி அதிகமாகும் போது தொழில் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் ஆட்களை எடுக்க முயற்சி செய்யும். ஊதியம் குறைவாகக் கிடைக்கும் பட்சத்தில் செலவும் குறைவாகத்தான் செய்ய முடியும். பணப்புழக்கமும், மக்களின் வாங்கும் சக்தியும் குறையும்.

வாங்க முடியாத பொருட்கள் விற்பனையாகாமல் இருந்தால் பொருட்களின் உற்பத்தி குறையும், உற்பத்தி குறைந்தால் உற்பத்தித் துறையில் வேலையிழப்பு நடக்கும். உற்பத்தித் துறையைத் தொடர்ந்து சேவைத்துறை. இப்படியே செயின் இழுத்து, கேயாஸ் தியரி ரேஞ்சுக்கு யோசித்துப் பாருங்கள். என்ன நடக்கும்? மக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் செலவு செய்யப் படாமல் வங்கிகளில் முடங்கும். பணப் புழக்கம் இல்லாவிட்டால் இந்தியப் பொருளாதாரம் தடுமாறும். (இதெல்லாம் நடக்கும் என்று சொல்லவில்லை ஐயா, பயப் படாதீர்கள், நடக்க வாய்ப்புண்டு என்றுதான் சொல்கிறேன். அப்படி நடக்கும் பட்சத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும்.)

உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் துபாயின் சுற்றுலாத்துறையை பலமாகவே பாதித்துள்ளது. கையில் காசு இருந்தால் தானே அய்யா ஜாலியாக ஊர் சுற்ற முடியும்? கையில் காசு இல்லை, கிரெடிட் கார்டு தேய்க்கவும் லிமிட் கொடுத்தாயிற்று. அப்புறம் எப்படி டூரிஸ்ட் வருவார்கள்? காசு வரும்? துபாயின் பொருளாதாரம் முக்கியமாக சுற்றுலாத்துறையை நம்பியே உள்ளது.

அங்கே தற்போது ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. நிலங்களையும் கட்டிடங்களையும், கிட்டத்தட்ட பாதி விலைக்குக் கூவிக் கூவி விற்கிறார்கள். இதன் தாக்கம் துபாயில் செயல்பட்டு வரும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களின் இலாபத்திற்கு கடும் வீழ்ச்சியைத் தரும். அதே போல் பழைய விலைகளில் வாங்கியுள்ள அல்லது வாங்குவதாக அக்ரிமெண்ட் போட்டுள்ள நிறுவனங்கள் தலையில் துண்டைப்போட்டுத்தான் போக வேண்டும். அப்படி வாங்கும் பட்சத்தில் அவர்களது இலாபத்தில் ஒரு பெரும் இழப்பு உண்டு.

ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானம் குறித்த வேலைகள் செய்து தர அங்கே சென்றுள்ள நிறுவனங்களுக்கும் அடி. பாதிப்பு. பேமெண்ட் பேசியபடி பேசிய அளவு பேசிய நேரத்தில் வராது. அதனால் அவர்களது பாட்டம் லைன் எனப்படும் அசல் வரம்பு பாதிக்கப் படும். இதனாலேயே அங்கே பெரிய பெரிய புராஜக்டுகள் கேன்சல் செய்யப் பட்டு வருகின்றன. இவற்றில் இந்தியாவின் நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ ஓமேக்ஸ் மற்றும் பி.எஸ்.ஈ.எல் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

துபாய் வேர்ல்டின் தற்போதைய அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு எதையும் உடனடியாக ஏற்படுத்தாது என்றும் இதனால் அதிர்ச்சி ஏதும் அடைய வேண்டாம் என்றும் இதனால் அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு உடனடி வேலையிழப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் திரு. வேணு ராஜாமணி (India's consul-general in Dubai) கூறியுள்ளார். (அப்படி என்றால் என்ன அர்த்தம். உடனடியாக இல்லை. மெள்ள மெள்ள ஏற்படும் என்றா?)

இதில் மற்றொரு ஹைலைட்டாக மும்பை படவுலகம் (ஏன் தமிழ், தெலுங்கு உள்ளிட்டவையும் தான்) கூட இதனால் பாதிக்கப் பட்டுள்ளன. திரைப்படங்களைப் பொறுத்த வரை, அவை தமிழ், தெலுங்கு, இந்தி என எதுவாக இருக்கட்டும், அவற்றிற்கு துபாய் முக்கியமானதொரு வர்த்தகக் கேந்திரம். இந்திப் படங்களுக்கான வெளிநாட்டு வியாபாரத்தில் சுமார் 50 சதவீதம் துபாயில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

இப்போது எழுந்துள்ள பொருளாதாரப் பிரச்சினையால் அங்கே மந்தமான நிலை நீடிக்கிறது. யாரும் சினிமா பார்க்க விரும்பவில்லை. சமீபத்தில் துபாயில் வெளியாக வேண்டிய ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் வழங்கும் அமிதாப்பின் பா திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போக பல கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

முதலீடு என்று பார்த்தாலும் பாலிவுட் பட்டையைக் கிளப்புகிறது. துபாயில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் ஷாருக் கானுக்கு 5000 சதுர அடி வீடு ஒன்று உள்ளது. இது தவிர இன்னும் சில முதலீடுகளும் வைத்துள்ளாராம் ஷாருக். ஹ்ரித்திக் ரோஷன், கரீனா கபூர் சுனில் ஷெட்டி போன்றோர் துபாய் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். இது போக அபியும் ஐஸூம் சேன்க்சுவரி ஃபால்ஸ் என்ற இடத்தில் ரிஸார்ட் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்களாம்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (3)
  • mohan
    nice chapter
  • venkat
    59 billion dollars is not 5900 crore rupees, it is 271,400 crore rupees
  • balaganesh narayanan
    lets just hope our politicians r a bit careful this time, we can recover from anything we've proved it once but this time we will be on the look out not to let anything happen... :D
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
Banner

எங்கள் செய்திச்சேவையைபெற


ட்விட்டரில் தொடர

குட்டி ad

Low Cost Webhosting
Webhosting @ 499

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED