மும்பை : புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, இனி பணத்தை அனுப்பத்தேவையில்லை. ஆம், இதற்கென புதிய அணுகுமுறையை செபி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பங்குகள் ஒதுக்கப் படாத பட்சத்தில் முதலீட்டாளர்களின் பணம் உடனடியாக கிடைத்துவிடும்.
அப்ளிகேஷன்ஸ் சப்போர்ட்டடு லெ பிளாக்டு அமவுன்ட் (ஏஎஸ்பிஏ) என்ற புதிய திட்டத்தை செபி அறிமுகப்படுத்தி உள்ளது. எனினும், ஏற்கனவே உள்ள விண்ணப்ப நடைமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், விண்ணப்பத்துடன் பணம் அனுப்பத் தேவையில்லை. காசோலை மட்டும் அனுப்பி வைத்தால் போதும். இதன்படி, முதலீட்டாளர்கள், தாங்கள் கோரும் பங்குகளுக்கு உரிய தொகையை தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருப்பு வைக்க வேண்டும். அந்தத் தொகையை முதலீட்டாளரின் கணக்கிலேயே வங்கி பிடித்து வைத்துக் கொள்ளும். எனினும், பங்குகள் ஒதுக்கப்படும் வரை அந்தத் தொகையை வேறு வகையில் முதலீட்டாளர்கள் பயன்படுத்த வங்கி அனுமதிக்காது.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பங்குகள் ஒதுக்கப்பட்டால் அதற்குரிய பணம் மட்டும் பங்கு வெளியிடும் நிறுவனத்துக்கு சென்று விடும். பங்குகள் ஒதுக்கியது போக மீதி இருந்தாலோ, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அந்தத் தொகையை வங்கிகள் விடுவித்து விடும். அன்றைய தினமே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த புதிய அணுகுமுறையின் மூலம் முதலீட்டாளர்களின் வேலை பளு குறைவதுடன் மன உளைச்சலிலிருந்தும் விடுபட முடியும். முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





